சென்னை: எழும்பூர் காவல் நிலையம் உதவியாளர் ரவிச்சந்திரன் இன்று (செப்.25) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எழும்பூர் பிவி செரியன் ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்தப்போது டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்துள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தின் ஓட்டுநர் பாபுவை அழைத்து விசாரணை செய்த பின்னர், வாகனத்தை சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக வெளிநாட்டு நாணயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து ஓட்டுனர் பாபுவையும் வாகனத்தில் இருந்த 25 மூட்டை மலேசியா நாட்டு நாணயங்களையும் பறிமுதல் செய்து எழும்பூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக பாபுவிடம் விசாரணை மேற்கொண்ட போது தனது உரிமையாளர் எழும்பூர் பி.வி செரியன் சாலையை சேர்ந்த ஆசிஃப் என்பவர் வாகனத்தில் ஏற்றி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எழும்பூர் காவல் துறையினர் ஆசிப்பை காவல் நிலையம் அழைத்து வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மலேசிய நாட்டு நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பெங்களூருவிலிருந்து குட்கா, பான்மசாலா கடத்திய கணவன், மனைவி கைது