குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக ஐந்து கிலோ அரிசி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவைக்கு ஏற்ப புழுங்கல் அரிசி, பச்சரிசி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜுன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (AAY) மாதம்தோறும் அதிகபட்சம் 35 கிலோ அரிசியும், 93 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு (PHH) நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும், எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH) 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கு ஏற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம். மேலும் கரோனா பரவலின் இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே, ஜுன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா ஐந்து கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது. உதராணமாக, ஈரலகு உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, மூன்று அலகு உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து இரு மடங்கு அரிசி கிடைக்கும்.
மே மாதம் வழங்க வேண்டிய இந்தக் கூடுதல் அரிசி விநியோகம், அடுத்த மாதம் (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும். எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியையும் சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப ஜுன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விளம்பரப்பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு