சென்னை: தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "வடகிழக்குப் பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு, முதலமைச்சர் எடுத்த தொடர் நடவடிக்கையால் தான், பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையிலும் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.
கடலூர், செங்கல்பட்டு, தேனி உட்பட தமிழ்நாடு முழுவதும் 99 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் 52,751 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிவாரண மையத்தில் மட்டும் மக்கள் உள்ளனர். அதில் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பில், பசு, எருமை ஒன்றிற்கு 30,000 ரூபாயும்; செம்மறி ஆடு, ஆடு, பன்றி ஒன்றுக்கு 3,000 ரூபாயும்; எருது ஒன்றிற்கு 25,000 ரூபாயும் - கன்றுக்குட்டி ஒன்றிற்கு 16,000 ரூபாயும் ; கோழி ஒன்றிற்கு 100 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.
குடிசை வீட்டிற்குள் தண்ணீர் சென்றிருந்தால் 4,800 ரூபாயும், குடிசை முழுமையாக சேதமடைந்திருந்தால் 5,000 ரூபாயும், குடிசை பகுதியாக சேதமடைந்திருந்தால் 4,100 ரூபாயும் வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். கான்கிரீட் வீடு சேதமடைந்திருந்தால் 5,200 ரூபாயும், கான்கிரீட் வீடு முழுமையாக சேதமடைந்திருந்தால் 95,000 ரூபாயும் வழங்கப்படும்.
மலைப்பாங்கான பகுதியில் உள்ள கான்கிரீட் வீடு முழுமையாக சேதமடைந்திருந்தால், 1 லட்சத்து 1,900 ரூபாய் வழங்கப்படும். வடகிழக்குப் பருவமழையால் தென்னை மரம் விழுந்தால் 18,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழை இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்