இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருந்தியபாடில்லை. நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல் கட்சிக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டும், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும்- மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று அலட்சியமாகவும் ஆணவத்துடனும் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதைக் கூடத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் “தினமும் 7000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு வருகிறோம்” என்று இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவரே பத்திரிகையாளர் சந்திப்பில் உளறிக் கொட்டி,பத்திரிகையாளர் நகைப்புக்குப் பாத்திரமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களில் 200 மில்லியன் (தலா 100 மில்லியன் லிட்டர்) லிட்டர் குடி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கே நன்கு தெரியும். பத்திரிக்கைகளிலேயே இந்த இரு கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
தொடர்ந்து மழைப் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும், “நெம்மேலியில் இன்னொரு 150 மில்லியன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும்” “சென்னை அருகில் உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும்” நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்? “நான்கு வருடங்களில் நிறைவேற்றப்படும்” என்று 2013ல் அறிவிக்கப்பட்ட அந்த இரு திட்டங்களும் 2019 ஆம் ஆண்டிலும் அப்படியே கிடப்பது ஏன்? இப்போது அவசர அவசரமாக 150 மில்லியன் லிட்டர் நெம்மேலி கடல் நீர் திட்டத்தை நிறைவேற்ற விடப்பட்டுள்ள டெண்டரில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
ஆகவே சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டுமின்றி - தமிழ்நாடு மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு முழுக்காரணம். ஆகவே இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யத் தவறினால், முதலமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடானு கோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து தயவு தாட்சண்யம் பார்க்காமல் “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.