சென்னை பெருநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (57), புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரா ராவ் (54) ஆகிய இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு மற்றும் மரபுசார் குற்றப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகேந்திர ராவ், வெங்கடாசலம் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு மற்றும் மரபுசார் குற்றப்பிரிவு உதவி ஆணையர் செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதன்படி இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை: முன்னாள் அரசு ஊழியர் உட்பட மேலும் இருவர் கைது!