சென்னை காமராஜ் சாலை சர்வீஸ் ரோட்டில், நேற்று இரவு (டிச.14) மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆயுதப்படைக் காவலர் பாபு (35) என்பவர் இளம்பெண்ணிடம் ஐஸ்கிரீம் சாப்பிட வருமாறு அழைத்துள்ளார்.
அதற்குப் பெண் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த காவலர் பாபு அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாபு அங்கிருந்து கடற்கரைக்குச் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வழியாக வந்துள்ளார். அப்போது, தனது குடும்பத்தாருடன் நின்றுகொண்டிருந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
உடனே இளம்பெண்ணின் தந்தை காவலர் பாபுவிடம் இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் ஓடிவந்து காவலர் பாபுக்கு அடிஉதை கொடுத்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் பாபுவை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை. ஏற்கெனவே கடந்த வாரம் மதுபோதையில் தலைமைக் காவலர் ராஜு இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் அடிஉதை வாங்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மது அருந்திவிட்டு மாணவிகளிடம் சில்மிஷம் - முதியவர் கைது