சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமூக நலக்கூடங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதத்தில் பொறுப்பு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சமூகநலக்கூடங்களின் முன்பதிவு செய்யும் இடத்தில் அறிவிப்பு பலகை ஒன்று இடம்பெற வேண்டும். அதில் முன்பதிவு செய்யப்பட்ட தேதிகள் குறித்த விவரங்கள் தவறாமல் இடம் பெற வேண்டும்.
சமுதாய கூடத்திற்கான முழுநாள் வாடகை, அரைநாள் வாடகை, முன்வைப்புத் தொகை எவ்வளவு உள்ளிட்ட கட்டண விவரங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். முன்பதிவு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் குறித்த விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து சமுதாயக் கூடங்களிலும் அறிவிப்பு பலகையை ஒருவாரத்திற்குள் பொருத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பெடி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சமுதாய நலக்கூடங்கள் காலியாக உள்ளதா உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் மற்றும் கலையரங்குகளில் முன்பதிவு முறைகேடுகளை களையும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.