சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்றும் (ஜன. 23) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன 16) அன்று முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடர்ந்து வருகின்றன.
ஆட்டோ, டாக்ஸிக்கள் இயக்கம்
மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன்கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படுகின்றன. வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
பார்சல் சர்வீஸ் உண்டு
மாவட்ட ரயில் நிலையங்களுக்கும், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். உணவங்களில் பார்சல் சேவை செயல்படும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகளில் பங்கேற்க அனுமதி உண்டு.
அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
ஊடகத்துறையினர், அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் காவல் துறையிடம் அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம். ஊரடங்கின்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இச்சூழலைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவர்கள் இழப்பீடு பெற ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு