முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.21) தலைமைச்செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் (DISHA), மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களைக் கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA குழு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், துணைத் தலைவராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் உள்ளனர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களான நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத்திட்டம், தேசிய நல்வாழ்வு குழுமம் (National Health Mission), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச்சட்ட அமலாக்கம் மற்றும் பிரதம மந்திரி முன்னோடி கிராமத்திட்டம் ஆகியத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் இக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும், திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடுதல் நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கிடும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு