சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.31) பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன், "அதிமுக ஆட்சியில் போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்காக இ-பாக்ஸ் நிறுவனம் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது அந்த பயிற்சி வழங்கப்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள், ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.
ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவுள்ளது. ஏற்கனவே ஆசிரியர்களுக்கு பல இடர்பாடுகள் உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் மாணவர்களிடம் கருத்துகளை கேட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்பது ஆரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது. கற்றுக் கொடுக்கவே ஆசிரியர்கள் உள்ளனர், மாணவருடைய உடல்நிலையினை விசாரித்து பதிவிடுவதற்கு அல்ல.
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களுக்கு பெற்றோர் வருவதில்லை, பல குறைபாடுகள் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். தற்காலிக ஆசிரியர்கள் 12,000 பேரை நிரந்தரம் செய்வதாக கூறியுள்ளீர்கள், இதுவரை செய்யப்படவில்லை. மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று சொன்னீர்கள், இதுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் பல இடங்களில் தாக்கப்படுவது செய்திகளில் வெளியாகிறது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்க வேண்டும். நற்பண்புகளை பாடத்திட்டம் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
ஆன்லைன் ரம்மியை நாம் எதிர்த்து வரும் நிலையில், ரம்மி தொடர்பான பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருக்கின்றது. பாடத்திட்டங்கள் சரியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மாணவர்களை சென்று சேர வேண்டும்" என்று கூறினார்.