அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வில் கொண்டுவந்த புதிய திருத்தத்தின்படி, மாணவர் ஒருவர் ஒரு பருவத் தேர்வில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடத்தில் தேர்ச்சிபெற மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் தோல்வியடைந்தால், மேற்கொண்டு தேர்ச்சியடையும்வரை அடுத்த பருவத்திற்குச் செல்ல முடியாது.
இந்த புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி விழுக்காடு பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, புதிய நடைமுறையை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த தடை விதிக்கவேண்டும் என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே.கே.கே. நடராஜா பொறியல் கல்லூரியைச் சேர்ந்த மெளலி, பிரியதர்ஷினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக உயர் கல்வித் துறை செயலரும் அண்ணா பல்கலை கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:'அண்ணா பல்கலை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை..!' - சூரப்பா விளக்கம்