பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை 2012-13ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இம்முறையில் வளரறி மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண்களும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கு 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வளரறி மதிப்பீடு இரண்டு வகைகளில் மதிப்பிடப்படுகின்றன. அதில் ப்ராஜெக்ட் மாதிரி வடிவமைத்தல், செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் ஒவ்வொரு பாட அலகிலும் சிறுசிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவைகளுக்கு 20 மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன. மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் பாடப்பகுதியில் உள்ள பாட கருத்துகளில் மாணவர்களின் கற்றல் விளைவுகள் மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ, வட்டார அளவிலோ, மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்விற்கு வளரறி மதிப்பீட்டின் அடிப்படையில் 40 மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டியுள்ளதாலும், படிப்பறிவுத்திறனின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை, நியாயமான மதிப்பீடு முறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
எனவே தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்கள் உரிய பகுதிகளுக்கு வினாத்தாள்கள் அரசு தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக பாதுகாப்பான முறையில் பள்ளிகளுக்கு வழங்கி தேர்வுகள் நடத்தப்படும். விடைத்தாள்கள் அந்தந்த பகுதியிலுள்ள வட்டார வள குழு மையமாகச் செயல்படும் பள்ளிகளில் மாதிரி கொடுத்து திருத்தம்செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
இந்த நடைமுறையால் மாணவர்கள் மாநிலம் முழுவதும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக போதித்து அறியவும் நியாயமான மதிப்பீடு செய்யவும் மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும். மேலும் 5, 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வில் ஆண்டு இறுதித் தேர்வு அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்திவைக்க வேண்டாமென அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் அச்சப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: '5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இடைநிற்றலை அதிகரிக்கும்' - ஆதவன் தீட்சண்யா எச்சரிக்கை