சென்னை: கடந்த நவம்பர் 8-ஆம் தேதி ஊரக வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கி என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் 14 கிளைகளை அமைத்து சுமார் 3 ஆயிரம் பேரிடம் சுமார் 2 கோடி அளவில் மோசடி செய்த மோசடி மன்னன் சந்திரபோஸ் என்பவரை சென்னை மத்திய குற்ற பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சந்திரபோஸிடமிருந்து வங்கியில் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள், கருவிகள் , போலி ஏடிஎம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்திரபோஸை காவலில் எடுத்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையில் தமிழகம் முழுவதும் 14 கிளைகளை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை பயன்படுத்தி திறந்ததாலும், உண்மையான வங்கியை நடத்துவது போன்று வேலைக்கு ஆட்கள் சேர்க்க விளம்பரம் செய்ததன் அடிப்படையில் பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களிடம் முதலீடு வசூல் செய்து மோசடி செய்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக இந்த போலி வங்கிக் கிளைகளில் பணிபுரிவதற்கு அதிகபட்சம் எட்டு லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்து 40க்கும் மேற்பட்டோர் இந்த வங்கி கிளைகளில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக சந்திரபோஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலி வங்கிக் கிளைகளை தமிழகம் முழுவதும் ஆரம்பித்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டை வசூல் செய்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய திட்டமிட்டதாக சந்திரபோஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் மூலம் கிடைக்கப்படும் பணத்தை வைத்து தொடர்ந்து வங்கிக் கிளைகளை நடத்தலாம் எனவும் திட்டமிட்டதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மட்டும் அல்லாது வெளிநாட்டிலும் இந்த வங்கிக் கிளையை துவங்கி மிகப்பெரிய அளவில் மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. லண்டனில் இந்த போலி வங்கியின் கிளையை அமைப்பதற்கு அந்நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த போலி வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி போன்ற சான்றிதழை டெல்லியில் இருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்தப் போலி ஆர்பிஐ சான்றிதழ் வாங்கி கொடுக்க உடந்தையாக இருந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி வங்கி நடத்திய மோசடி மன்னன் சந்திரபோஸ் தொடர்பான தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பெண் பாஜக பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த வங்கிக்கு அவர் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் போலி வங்கி கிளைகளுக்காக டெல்லியில் அனுமதி பெறுவதற்கு இந்த பெண் பாஜக பிரமுகர் உதவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு போலி வங்கி கிளைகளை உருவாக்கி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ய உதவுவதால் , பென்ஸ் சொகுசு கார் ஒன்றை சந்திரபோஸ் வாங்கி அந்தப் பெண் பாஜக பிரமுகர் பெயருக்கு மாற்ற முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறோம் என்ற எண்ணம் இல்லாதவாறு, தான் வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் வங்கி கிளைகளை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே சந்திர போஸ் பேசி வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிகப்பெரிய அளவில் போலி வங்கி ஆரம்பித்து மோசடி செய்ய திட்டமிட்டு இருந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை மேற்கொண்டதால் பலரது பணமும் தப்பியுள்ளதாக காவல் துறையினர்தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சந்திரபோஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பொதுமக்களிடம் மிகப்பெரிய மோசடி செய்ய திட்டமிட்டு இருந்தது உறுதியானதால், கடந்த நவம்பர் 29ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து இந்த போலி வங்கி விவகாரத்தில் தொடர்புடைய பெண் பாஜக பிரமுகருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விரிவான விசாரணை தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: செயின் பறிப்பு குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!