தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலியாக இருக்கும் மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைமை ஆலோசனை நடத்தியுள்ளன. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நாளை மறுநாள் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் அதன்பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பொருளாதார மந்தநிலை, வெங்காய விலை உயர்வு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வரப்போகும் இடைத் தேர்தல் மூலம் உரிய பதில் கிடைக்கும்என்று கூறினார்.
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தேதி குறிப்பிடாமல் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!