சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்னும் இளைஞர் மழையில் நனைந்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். அவர் உயிரிழந்துவிட்டதாக அனைவரும் கருதியுள்ளனர்.
இந்த தகவல் காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்றார். உதயா உயிருடன் இருப்பதை அறிந்த ராஜேஸ்வரி, சிறிதும் தாமதிக்காமல் உதயாவை தனது தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகத்தை சார்ந்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல், பருவமழைக் காலத்துப் பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெருமழையில் சிக்கித் தவித்து, முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவின்றி கிடந்த உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு, கோல்டன் ஹவர் எனப்படும் அந்த பொன்னான நேரத்தை சரியாக உணர்ந்து, அவரைத் தோளில் சுமந்து, அவரை உயிர் பிழைக்க வைத்த தங்களின் அர்பணிப்பு மிக்க கடமையுணர்வும், சீருடைப் பணியாளர்களுக்குரிய ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்குரியவை.
ராஜேஸ்வரி ஆகிய தங்களின் மனிதாபிமான செயல்பாடு, தங்களைப் போன்ற மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கேற்ப கம்பீரமாகவும் கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி, காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்க கூடியதாகும். தங்களின் சேவைக்கு வாழ்த்துகள். சட்டத்தையும் மக்களையும் காக்கின்ற பணி தொடரட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம்