இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பரும், கவிஞருமான இளவேனில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடதுசாரிச் சிந்தனைக்குச் சொந்தக்காரர். கருணாநிதியின் “சாரப்பள்ளம் சாமுண்டி” என்ற கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட “உளியின் ஓசை” திரைப்படத்தை இயக்கியவர். எழுத்தாளராக இருந்த இளவேனில் இயக்கிய முதல் படமும் அதுதான். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அத்திரைப்படத்தைக் கண்டு, “எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துள்ளார்” என்று கவிஞர் இளவேனிலை மனதாரப் பாராட்டியதை இந்நேரத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
“புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்” என்ற இளவேனில் புத்தகத்திற்கு முத்தான முன்னுரை வழங்கிய கருணாநிதி, தனது இதயத்தில் அவருக்குத் தனி இடம் கொடுத்து வைத்திருந்தார்.
இலக்கிய உலகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இரண்டு மனைவி இலவசம் - திமுகவை சீண்டிய சி.வி.சண்முகம்!