வாகனங்கள், வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வாங்க, விற்க ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தைப் பலரும் பயன்படுத்திவருகின்றனர். இதனைப் பயன்படுத்தி மோசடிசெய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
இரு தினங்களுக்கு முன்பாக ராணுவ அலுவலர்களாகத் தங்களை அறிமுகம் செய்து வாகனங்கள் விற்பதாக மோசடிசெய்து ஓ.எல்.எக்ஸ். மூலமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த இரண்டு பேரை, மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் ராஜஸ்தானில் கைதுசெய்து அவர்களை சென்னை அழைத்துவந்தனர்.
இந்நிலையில், சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பி.பி. சாலையிலுள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் வீடு கட்டி ஏராளமானோர் வசித்துவருகின்றனர். அதில் அன்சாரி, சலாவுதீன் ஆகியோர் அப்படி கட்டப்பட்ட ஒரு வீட்டில் வசித்துவந்துள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்துவிட்டு அவர்கள் வேறு பகுதிக்குச் சென்றுள்ளனர்.
சில மாதங்களாக அந்த வீட்டில் யாரும் வசிக்காத நிலையில், அந்த வீடு 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாக ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தில் விளம்பரம் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திருப்பாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செல்வி நற்சோணை, ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சாதிக் பாட்சா என்பவர் கோயிலுக்குச் சொந்தமான 561 சதுர அடி நிலத்திலுள்ள வீட்டை 30 லட்ச ரூபாய்க்கு விற்க விளம்பரம் செய்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சாதிக் பாட்சாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:சாலைகளை விரிவுபடுத்த கோரிக்கை - நெடுங்சாலைத் துறை திட்ட இயக்குநர் ஆஜராக உத்தரவு