சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, முக்கிய இடங்களில் காவல் குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணித்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த (மார்ச்.19) அன்று நள்ளிரவு மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞர்கள் சிலர் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டடுது தொடர்பான வீடியோ வெளியானது.
இது தொடர்பாக அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் இளைஞர்கள் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தைச் சாலையில் இயக்கியது தெரியவந்தது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
பைக் வீலிங்கில் ஈடுபட்ட திருவிக நகரைச் சேர்ந்த முகேஷ், ரோமன்அல்கிரேட், புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹரிகரன், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த முகமது சாதிக், முகமது ரகமத்துல்லா, முகமது ஆசிப் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய 2 சிறுவர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து விலையுயர்ந்த கே.டி.எம் பைக், 4 யமஹா, 1 ஆக்டிவா என மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள 2 பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கனவே பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களை மாற்றியமைப்பதும் (Modify) சட்ட விரோதமானது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களை மாற்றியமைக்கும் நபர்கள் பற்றிய விவரங்களைச் சம்பந்தப்பட்ட மெக்கானிக்குகள் (Mechanic) அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம். இவ்வாறு இளஞ்சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், இளஞ்சிறார்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் காயங்கள் உண்டாகி, அசாம்பவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள், 18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்கத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், மீறி வாகனங்களை ஓட்டும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!