நெல்லையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய நெல்லை கண்ணன் பாரதிய ஜனதாவின் அழுத்தத்தாலும் நிர்ப்பந்தத்தாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் துணை தலைவர் தெகலான் பாகவி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்,
'வயது முதிர்ந்தவரான நெல்லை கண்ணன் முதுபெரும் தமிழ் இலக்கியவாதி, நீண்ட காலம் தமிழுக்கு தொண்டாற்றியவர். நெல்லை மாநாட்டில் அவர் பேசிய பேச்சு உள்நோக்கத்தோடு பேசியதல்ல, மாறாக பாஜக அரசின் வெறுப்பு அரசியல், மக்கள் விரோத செயல்பாடுகளால் விரக்தியும், கோபமும் கொண்ட அவரின் அறச்சீற்றமே அந்தப் பேச்சு.
அதற்கு உள்நோக்கம் கற்பித்து சிஏஏவிற்கு எதிரான மக்களின் கோபத்தை திசை திருப்பப்பார்க்கிறது பாஜக, எனவேதான் நெல்லை கண்ணனுக்கு எதிரான இந்த போராட்டத்தை மற்ற அரசியல்கட்சிகள், அமைப்புகளுக்கு மெரினாவில் போராட அனுமதிக்காமல் நெருக்கடி கொடுக்கும் தமிழ்நாடு காவல்துறை பாஜகவினருக்கு போராட அனுமதித்தது ஏன்?
ஹெ.ச்.ராஜா உள்பட பாஜகவின் பல்வேறு தலைவர்களின் மீது வெறுப்பு, வன்முறைப்பேச்சு சம்பந்தமாக கொடுக்கப்படும் பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை நெல்லை கண்ணன் மீது மட்டும் இவ்வளவு துரிதகதியில் கைது நடவடிக்கை எடுத்தது ஏன்? கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது ஏன்? பாஜக மீது பயமா? அல்லது பாசமா? நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும் கடமையுணர்வும் ஹெ.ச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்?
காவல்துறையின் ஒருதலைப்பட்சமான, பாஜகவுக்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது. அவர் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: 'நெல்லை கண்ணன் கைது விவகாரத்தில் அரசுக்கு உள்நோக்கம் கிடையாது'