சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை இன்று (மார்ச் 19), மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசலு உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "7 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள் (என்.எம்.ஆர்) பணித் தொடர்ச்சியுடன் மாநகராட்சியில் இணைக்கப்பட்டனர்.
இந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து 2014ம் ஆண்டு சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் 27.5.2015 அன்று மன்றக் கூட்டத்தில் தீர்மானம் (எண்.27) நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அரசாணை வேண்டி அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் 2016ம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களை விரைவில் பணி வரன்முறை செய்வதாக உறுதிமொழி அளித்தது. ஆனால் அதன்படி தொழிலாளர்கள் பணி வரன்முறை செய்யப்படவில்லை. இத்தொழிலாளர்களில் 25 பேர் மரணமடைந்துள்ளனர். கட்டாய ஓய்வில் பலரை நிர்வாகம் அனுப்பி உள்ளது. ஓய்வில் சென்றவர்களுக்கு பணிக்கொடையும் வழங்கவில்லை.
இவர்களோடு பணிபுரிந்து குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் இணைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் பலமுறை கடிதம் அளித்து முறையிட்ட பிறகு தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினுடைய செயலாளர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விரைந்து பணி வரன்முறை செய்வதாக உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து, தொழிலாளர்களை மருத்துவப் பரிசோதனை செய்து, ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. இருப்பினும், தொழிலாளர்கள் பணி வரன்முறை செய்யப்படவில்லை. எனவே, என்.எம்.ஆர். தொழிலாளர்களை விரைந்து பணி வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் பட்டாபி, பொருளாளர் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் - மக்கள் ஆறுதல்