சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தனது கணவர் நடராஜன் மரணம் தொடர்பாக சசிகலா பரோலில் வெளிவந்தார். முன்னதாக சிறை விதிகளை மீறி அவர் ’ஷாப்பிங்’ சென்ற தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து, கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டினார்.
ஆனால் இவற்றுக்கு நேர்மாறாக சசிகலாவின் நன்னடத்தை காரணமாக, அவர் சிறைத்தண்டனை முடியும் முன்னரே விடுதலையாவார் எனச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், ஆர்டிஐ மூலம் சசிகலாவின் விடுதலைத் தேதி குறித்து முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த கர்நாடக சிறை நிர்வாகம், 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தது.
மேலும் ”சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட அபாரதத்தொகை 10 கோடி ரூபாயை அவர் செலுத்தாவிடில், அவர் விடுதலையாவதில் காலதாமதம் ஆகலாம். எனவே வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாகலாம்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளருக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனது தண்டனைக் காலம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மூன்றாவது நபருக்குத் தெரிவிப்பது தனது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு உரிமையை மீறும் செயல் என்றும், தான் விடுதலையாகும் நாள் உள்ளிட்ட விவரங்களை, மூன்றாவது நபருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அளிக்கக் கூடாது என்றும் சசிகலா கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு, சொத்து விவரம் ஆகியவை குறித்துக் கேட்பதுதான் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதன்கீழ் அடங்கும் என்றும், ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் மக்கள் வரிப்பணத்தில் உணவு, இருப்பிடம் உள்ளிட்டவற்றைப் பெறும் ஒருவர் குறித்த பொதுவான தகவல்களைக் கொடுக்கக் கூடாது எனக் கோருவது முறையல்ல என்றும் நரசிம்ம மூர்த்தி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து சிறைத்துறை ஆணையத்திடன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், சசிகலா வருகிற ஜனவரி மாதம் 28ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் வழக்கில் சசிகலா இதுவரை இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதன்படி, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியோடு அவரது நான்கு ஆண்டு தண்டனை முடிவடைகிறது.
ஆனால், சசிகலா, 6-10-2017 முதல் 12-10-2017 வரை ஐந்து நாள்கள், 20-03-2018 முதல் 31-03-2018 வரை 12 நாள்கள் என மொத்தம் 17 நாள்கள் பரோலில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பரோல் நாள்களையும் கணக்கில்கொண்டால் அவர் மார்ச், 3ஆம் தேதி வெளிவரக்கூடும். ஆனால், அவர் ஏற்கனவே இவ்வழக்கில் 35 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவற்றைக் கழித்துவிட்டு கணக்கிட்டால், வருகிற ஜனவரி மாதம் 28ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரசு விடுமுறை நாள்கள் சிறைக் கைதிகளுக்கும் பொருந்தும் என்றபோதும், ஊழல் வழக்கு, ஆயுள் தண்டனை உள்ளிட்ட சில குற்றங்களில் தண்டனைப்பெறும் குற்றவாளிகளுக்கு விடுப்பு நாள்கள் கணக்கில் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.