சென்னை: மதுராந்தகம் ரயில் நிலைய மேலாளருக்கு மேல்மருவத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்ற நபர் மூலம் கடிதம் ஒன்று வந்தது. அதில், "சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்க சில கேரள மாவோயிஸ்ட் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அந்த இடங்களில் எல்லாம் வெடிகுண்டு வெடிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்து.
இதனையடுத்து மதுராந்தகம் ரயில் நிலைய மேலாளர் அளித்த தகவலின் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய் டைசன், வெடிகுண்டு வல்லுநர்கள் உதவியுடன் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளைச் சோதனை மேற்கொண்டனர்

சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியான நிலையில், மிரட்டல் வந்தது வதந்தி எனத் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மதுராந்தகம் ரயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து போலி மிரட்டல் கடிதம் அனுப்பிய கங்காதரன் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கங்காதரன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், ஏற்கனவே இதுபோன்ற போலியான மிரட்டல்கள் விடுத்த காரணத்திற்காகக் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: காரில் வந்து கவரிங் நகை பறித்த கும்பல்... அதிரடி கைது!