நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஜனவரி 7ஆம் தேதிமுதல் நேரடியாக நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மானாவாரி, நீர்ப்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் ரூ.13,500 இருந்து ரூ.20,000 ஆக உயர்வு மானாவாரியில் நெல் தவிர பிற பயிர்களுக்கு நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.7,410 இருந்து ரூ.10,000 ஆக உயர்வு.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நிவர், புரெவி புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழு தமிழ்நாட்டில் ஆய்வு நடத்தியது. ‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க 3108.55 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும், ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க 485 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க 1,029 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் எனத் தெரிவித்து மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
நிவர், புரெவி புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், வேளாண் பெருமக்கள் அதிக உற்பத்திச் செலவுசெய்து, பேரிடரால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதைக் கருத்தில்கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,
- மானாவரி, நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான ரூ.13,500 என்பதை, ரூ.20,000 உயர்த்தப்படுகிறது.
- மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.7410 என்பதை, ரூ.10,000 உயர்த்தப்படுகிறது.
- பல்லாண்டு காலப் பயிர்களுக்கு (perennial crops) இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.18,000 என்பதை, ரூ.25,000 உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
2 ஹெக்டேர் Vs 2 எக்டேர்
மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்தப் பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 எக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நிவர், புரெவி புயல்களின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும்.
இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் (ஜன. 07) முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.