சென்னை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. முதல் திருப்புதல் தேர்வில் அறிவியல், கணிதம் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில், இன்று (பிப்ரவரி 14) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகியுள்ளன.
சென்னையிலிருந்து இந்த வினாத்தாள் வெளியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிற்பகலில் நடக்க வேண்டிய தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சென்னையிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு காலையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தப் பள்ளியிலிருந்து வினாத்தாள்கள் கசிந்தன என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
தேர்வு தொடங்குவதற்குச் சற்று முன்னரே கேள்வித்தாள்கள் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். ஆனால் முன்கூட்டியே வழங்கப்பட்டதால் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. நாளை முதல் முன்கூட்டியே கேள்வித்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு