சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் கண்வேயா் பெலட் 1 அருகே பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானத்தில் செல்லும் பயணிகள், வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து பிற நகரங்களுக்கு செல்ல காத்திருக்கும் பணிகள் குறுகிய நேரம் ஒய்வு எடுக்க அதி நவீன வசதிகள் கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிநவீன கேப்சூல் படுக்கைகளை சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் கொண்ட கேப்சூல் ஒட்டல் அமைக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரம் ஓய்வுக்காக படுக்கை வசதி தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் முலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதில் முதல் 2 மணி நேரத்திற்கு ரூ.600 என்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.250 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஒரு படுக்கையில் ஒரு பயணியும், 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் ஒய்வு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த படுக்கை அறைக்குள் பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடம், செல்போன் சார்ஜ் வசதி, புத்தகம் படிப்பதற்கான விளக்கு வசதி, ஏசியை கூட்டி குறைப்பதற்கான வசதிகள் உள்ளன. விமானத்தில் வந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் பயணிகள் யாரும் கேட்கவில்லை என்றால் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
விமான பயணிகள் அவர்களுடைய விமான டிக்கெட், போர்டிங் பாஸ், பிஎன்ஆர் நம்பரை வைத்து முன்பதிவு செய்ய முடியும்.விமான பயணிகள் அல்லாதவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது. பயணிகளிடம் உள்ள வரவேற்பை பொறுத்து படுக்கைகள் அதிகரிக்கப்படும் என சரத்குமார் தெரிவித்தார்.