கரோனா தொற்று காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகளில் இயங்கும் ரேஷன் கடைகள் காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மே மாதத்திற்குரிய ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான டோக்கன் 2, 3 ஆகிய இரு தேதிகளில் வீடு வீடாக சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். அப்போது குடும்ப அட்டைதாரர்களிடம் நேரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும். டோக்கன் வழங்கும் போது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு தொகுப்பாக தயார் நிலையில் வைத்து வினியோகம் செய்ய வேண்டும்.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் ஒரே தவணையில் வழங்குவதற்கு ஏதுவாக இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொருள்கள் இல்லை என குடும்ப அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக்கூடாது. பொருள்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்புடன் நியாயவிலைக் கடை பணியாளர்கள் நேரில் சென்று வழங்கவேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு 8 ஆம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) வாராந்திர விடுமுறை தினமாகும். ஆனால் அன்று கடைகள் செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக மே 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 கிலோ ரேஷன் அரிசி விற்பனை: மடக்கிப் பிடித்த பொதுமக்கள்... மாட்டிக்கொண்ட விற்பனையாளர்!