வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெய்யக்கூடிய மழையின் விவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜுன் 09) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜுன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
மேலும், ஜுன் 10 ஆம் தேதி மத்திய வங்கக் கடலில், ஜுன் 11,12 ஆகிய தேதிகளில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜுன் 10ஆம் தேதி முதல் ஜுன் 12ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக மாநிலங்களின் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஜுன் 9ஆம் தேதி முதல் ஜுன் 12ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உலகின் விலை உயர்ந்த மாம்பழம்: கிலோ 2 லட்சம் ரூபாயாம்!