தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் சங்கங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியுமென நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (ஜூன் 30) தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றுதான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இடங்களுக்கு, 248 கோடியே 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை மூலம், மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். மும்பை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி மகாதேவன், தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்க அறிவுறுத்தினார். தனியார் பள்ளிகளின் இந்த கோரிக்கையை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.