சென்னை: விருகம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்தவர் தீக்சித் (7). இவர் வளசரவாக்கம் அருகே ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று (மார்ச் 28) காலை வழக்கம் போல் மாணவன் தீக்சித், பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி மைதானத்தில் வாகனத்தில் இருந்து இறங்கிய மாணவன் தீக்சித், புத்தகத்தை வாகனத்தில் மறந்து சென்றுள்ளார்.
புத்தகத்தை எடுக்க மீண்டும் தீக்சித் வாகனத்தில் ஏறியுள்ளார். இதனையறியாத ஓட்டுநர் வாகனத்தை திடீரென எடுத்தபோது மாணவன் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். உடனே பள்ளி வாகன சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பள்ளி வாகன ஓட்டுநரான முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் (64) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி துறையின் மாவட்ட அலுவலரும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அப்பா குடிகாரர்... அம்மா ஓடி விட்டார்... 13 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை...