சென்னை: 2022 ஆம் ஆண்டுக்கான 444 உதவி ஆய்வாளர் பதவிகளுக்குத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகளை அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இயக்குநரகம் இன்று (ஜூன்.25) நடத்துகிறது. மொத்தம் 444 உதவி ஆய்வாளர்களைத் தேர்வு செய்வதற்காகத் தமிழ்நாடு முழுவதும் இன்று 39 மையங்களுக்குட்பட்ட 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
2.21 லட்சம் பேர் முகக்கவசம் அணிந்து தேர்வில் பங்கேற்றுள்ளனர். காலை 10 மணி முதல் பகல் 12. 30மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வும், பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வும் முதல் முறையாக நடத்தப்படுகிறது. 43 திருநங்கைகள், 43 ஆயிரத்து 949 பெண்கள் உட்பட 2 லட்சத்து 21ஆயிரத்து 213 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
குறிப்பாக சென்னையில் 10 இடங்களில் ஆயிரத்து 506 பெண்கள் உட்பட 8 ஆயிரத்து 586 பேரும், ஆவடி ஆணையரக எல்லைக்குள் 12 இடங்களில் ஆயிரத்து 499 பெண்கள் உட்பட 8 ஆயிரத்து 493 பேரும், தாம்பரம் ஆணையரக எல்லைக்குள் 11 இடங்களில் ஆயிரத்து 516 பெண்கள் உட்பட 8 ஆயிரத்து 590 பேரும் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
197 இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், வினாத்தாள் மற்றும் தேர்வுத் தாள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குநகரத்தில் இருந்து வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு காவல்துறை விண்ணப்பதார்களுக்கு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.