சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், '2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியபடி 5 ஆண்டுகளுக்குள் அணுக்கழிவு மையம் அமைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் இரண்டு உலைகளில் வெளியாகும் அணுக்கழிவுகளை உலைக்கு கீழே சேமிக்கத் திட்டமிட்ட நிலையில், 'Away from reactor' வசதியை 3 மற்றும் 4ஆவது உலைகளின்கீழ் சேர்த்து கட்டுமானம் கட்டுவதாக அந்த அமைப்புக் கூறியுள்ளது.
அணுக்கழிவு மையத்தை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாத நிலையில், அணுக்கழிவு மையத்தை அமைக்கும் அணுமின் நிலையம் சில ஆண்டுகள் கழித்து கழிவுகளை எங்கு கொண்டு செல்லும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலின் மூலம், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகளே திணறும் நிலையில் ஆழ்நில கருவூலம் அமைக்கும் இடம் கூட தேர்வு செய்யாமல் கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்க முயல்வது நியாயமா?’ எனவும் வினவியுள்ளனர்.
மேலும் 'மின் உற்பத்திக்கான அணு உலை கட்டுமானமும், கதிர்வீச்சை வெளியேற்றும் அணுக்கழிவு மைய கட்டுமானமும் ஒரே செயல்பாடாக கருதமுடியாது எனவும், தமிழ்நாடு மக்களை சோதனை எலிகளாக கருதி, அணுக்கழிவு மையம் அமைப்பதை ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்' எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது அதே கட்சியைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்கும் - சுப. வீரபாண்டியன் ஆருடம்