சென்னை: ஆலந்தூர் வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் மணி (55). இவர் படப்பையில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். உணவகத்தில் சாப்பிட வந்த வட மாநில இளைஞர் ஒருவர், மணியிடம் 2 கிலோ தங்க இருப்பதாகவும், அவசர பணத் தேவை இருப்பதால் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 கிலோ தங்கத்தை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய மணி, மாதிரி தங்கத்தை பரிசோதித்ததில் அசல் தங்கம் என உறுதியானது. இதனால், பேராசையில் 10 லட்சம் ரூபாய் இல்லை, 5 லட்சம் ரூபாய் தான் இருப்பதாக கூறி நகையை வாங்கிக் கொள்ள ஒப்புக் கொண்டார். அதன் பேரில் வட மாநில இளைஞர் குரோம்பேட்டை நியூ காலனிக்கு மணியை வரவழைத்து, 5 லட்சம் ரூபாய் பணம், 3.5 சவரன் தங்க நெக்லஸ் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, 2 கிலோ தங்க உருண்டைகளை கொடுத்தார். பின்னர் அந்த நபர் குரோம்பேட்டையில் ரயில் ஏறி சென்றார்.
2 கிலோ தங்கத்தை வாங்கிய மகிழ்ச்சியில் அதனை அடகு கடையில் எடுத்துச் சென்று பரிசோதித்தபோது அத்தனையும் போலி என தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த மணி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்’ - பள்ளிக் கல்வித்துறை