கரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணிகள், தேர்தல் பணிகள் என தொடர்ந்து ஓய்வில்லாமல் காவல் துறை பணியாற்றி வந்ததன் காரணமாக 45 விழுக்காடு காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 20 விழுக்காடு காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்க உத்தரவு அளிக்கப்பட்டது. பணியை பொறுத்து உயர் அலுவலர்கள் தாங்களே காவலர்களுக்கு விடுமுறை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "காவலர்கள் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தரப்பட வேண்டும். காவலர்களின் பிறந்தநாளுக்கும், திருமண நாள்களுக்கும் விடுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த சுற்றறிக்கையை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக காவலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒரு காவல் நிலையத்தில் 45 காவலர்கள் பணியாற்றுவதால் வாராந்திர ஓய்வு அளிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு என்றும், இதனை டிஜிபி கருத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டும் என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு