சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏசிடி (ACT) இன்டர்நெட் ஒயர் பதிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போழுது அங்கு மது போதையில் வந்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கமணி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு வழக்குரைஞர்கள், சந்திரசேகரிடம் இந்த பகுதியில் கேபிள் பதித்தால் ரூ. 10,000 தங்களுக்கு மாமூல் தரவேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.
இதனால் சந்திரசேகர் காவல் கட்டுபாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் புதுவண்ணாரப்பேட்டை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த காவல் துறையினர் சித்தார்தன், அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது காவலர்களையும் வழக்குரைஞர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் காவலர்களின் சட்டையைப் பிடித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் வழக்குரைஞர்கள் தங்கமணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயமடைந்த காவலர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்றனர்.
தாக்குதல் நடத்திய வழக்குரைஞர்களும், பாதிக்கப்பட்ட காவலர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருதரப்பினரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது!