சென்னை: தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், "அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017இல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை.
விதிமுறைகளுக்கு முரணாக கூட்டம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.
விதிமுறைகளுக்கு முரணாக ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை இன்று (ஜூன் 7) விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: 'அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்க வெகுநாட்கள் இல்லை' சசிகலா