சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி, கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்படுகின்றன. இதுபோன்ற தவறுகளை இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
அதனால், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும், அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இதுசம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.