தருமபுரி: ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைக் கைதியாக உள்ள பேரறிவாளன் பரோலில் வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் தங்கியுள்ளார்.
பேரறிவாளனுக்கு சிகிச்சை
பேரறிவாளன் நீரிழிவு, சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கு 30 நாள்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழ்நாடு அரசு பரோலை நீட்டித்துவருகிறது.
பரோலில் உள்ள பேரறிவாளன் கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனையடுத்து நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்புக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10 காவலர்கள் பாதுகாப்புடன் தருமபுரியில் உள்ள திமுக எம்பி மருத்துவர் செந்தில்குமார் ஸ்கேன் மையத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அப்பொழுது பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாளும் வந்திருந்தார். காவலர்கள் பாதுகாப்புடன் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுநீரகப் பிரச்சினை தொடர்பாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
2 மணியளவில் பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இதே மருத்துவமனைக்கு பேரறிவாளன் வந்து உடல் பரிசோதனை செய்துகொண்டார். தொடர்ந்து பேரறிவாளன் சிகிச்சைக்காக வந்ததால், தருமபுரி நகர்ப் பகுதியில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:நீண்ட நாள்கள் கழித்து பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!