சென்னை: தியாகராய நகர் - ராமகாமத்துபுரம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு, தற்போது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
பல கட்டடங்களில் மேல் தளங்கள் மிகவும் மோசமடைந்துள்ளன. சில வீடுகளின் கதவு, ஜன்னல்கள், சுவர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. பல அடுக்குமாடிகளில், பால்கனி அந்தரத்தில் தொங்குகிறது. இவை, எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முற்றிலும் சேதம் அடைந்துள்ள வீடுகளில் மழைநேரங்களில் வீட்டின் உள்ளே மழை நீர் வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
சுவர்கள் முழுவதும் விரிசல் விழுந்துள்ள நிலையில் ''o'' பிளாக்கில் நேற்று பால்கனி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அப்பொழுது அங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்த ஒரு மூதாட்டியும், ஒரு பெண்ணும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். தொங்கிய நிலையில் இருந்த பால்கனியை கடப்பாரை கொண்டு அகற்றியுள்ளனர்.
இந்நிலையில் இந்த இடிபாடு தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 113வது திமுக வட்ட செயலாளர் விஷ்ணு, மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து பார்வையிட்டு வந்த நிலையில், அங்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் பிரேமா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.