கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரி்ல் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான பில் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி, வந்த வேகத்தில் பெளவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு, பென் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் தமது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 44 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். இவரை தவிர, இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரன்களை எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டானதால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்கள், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அர்ஷ்தீப் சிங் சாதனை: இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணி வீரர் என்ற சாதனையை இன்று அவர் படைத்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுகேந்திர சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்கள் வீழ்த்தியிருப்பதே டி20 போட்டிகளில் இந்திய அணி வீரர் ஒருவர் வீழ்த்தியுள்ள அதிகபட்ச விக்கெட்டுகளாக இதுவரை இருந்து வந்தது
இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் என இருவரின் விக்கெட்டை வீழத்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை (97 விக்கெட்கள்) வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சிங் படைத்துள்ளார்.
யுகேந்திர சாஹல் மொத்தம் 80 போட்டிகளில் 96 விக்கெட்களை வீழ்த்தியிருந்த நிலையில், அவரது சாதனையை வெறும் 61 போட்டிகளில் அவரது சாதனையை முறியடித்துள்ளார் அர்ஷ்தீ்ப் சிங்.