சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பிற்காக தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், அந்த கட்டடங்கள் சரியான உறுதித் தன்மையுடன் அமைக்கப்படாமல் உடைந்து விழும் நிலைமையில் அதிகளவில் இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் பழுதடைந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு, மாணவர்கள் அமர்வதற்கு வகுப்பறை இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து உதவிப் புரிந்து வருகின்றன. ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இது போன்ற நிதியுதவி கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்கள், சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதளம் வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்கான இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார்.
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள வசதிகளையும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என கல்வித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'UPSC-க்கு தயாராகும் உங்களை கிண்டல் செய்தவர்கள் முன் சாதித்துக்காட்டுங்கள்' - ஆளுநர் நம்பிக்கை உரை