சென்னை: ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் இவ்வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிற்குள் ஒமைக்ரான் வைரஸ் நுழையாமல் தடுக்க மாநில அரசு, விமான நிலைய அலுவலர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இம்மாதம் டிசம்பா் முதல் தேதியிலிருந்து லண்டன், சிங்கப்பூர் போன்ற அதிக இடர் உள்ள 12 நாடுகள் - இத்தாலி, ஜொ்மனி, ரஷ்யா ஆகிய இடர் குறைவாக உள்ள 44 நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை சென்னை விமான நிலையத்திலேயே நடத்தப்படுகிறது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (டிசம்பர் 8) நள்ளிரவு 12 மணியிலிருந்து ஒமிக்ரான் பரிசோதனை கட்டணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்பேரில் விமான நிலையங்கள் ஆணையம் இந்தக் கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.
பரிசோதனைக் கட்டணம்
இதுவரை ரூ.3,400 ஆக இருந்த Rapid PCR பரிசோதனைக் கட்டணம் ரூ.500 குறைக்கப்பட்டு, ரூ.2,900 ஆக்கப்பட்டுள்ளது. அதைப்போல் RT-PCR பரிசோதனை கட்டணம் இதுவரை ரூ.700 ஆக இருந்தது. அது இப்போது ரூ.100 குறைக்கப்பட்டு, ரூ.600 ஆக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றிலிருந்து முன்தினத்திலிருந்து இந்தப் பரிசோதனைக்கான நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டணங்களும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு 700 லிருந்து 800 பயணிகளுக்குச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு சென்னை விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான விலையில் கிடைக்க கடைகள்
மேலும், விமான நிலையத்தில் பகுதியில் காபி, ஸ்நாக்ஸ் நியாயமான விலையில் கிடைக்க கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தனி அறை, வை-பை, இலவச தொலைபேசி வசதிகள், பொழுதுபோக்குச் சேனல்களுடன் தொலைக்காட்சி, விமானங்கள் வருகை-புறப்பாடு அறிவிப்புப் பலகை, வெளிநாட்டுப் பணங்களை மாற்றுவதற்கான எக்ஸ்சேஞ்ச் கவுன்ட்டர்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.