சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கினார். இது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
அந்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், ஸ்ரீ நிஷா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சிபிசிஐடி அலுவலர்களின் அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு முன்னிலையாகினர்.
அதேபோல், கடந்த 12ஆம் தேதி சிபிசிஐடி அலுவலர்கள், ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக சென்னை பல்லவாரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.
இவ்வழக்கில், சிபிசிஐடி சார்பில் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்யும்வரை ஜெகத்ரட்சகனைக் கைதுசெய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி அலுவலர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகின்ற ஜனவரி மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜெகத்ரட்சகனைக் கைதுசெய்யக் கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணை முடியும்வரை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய வேண்டாம் எனவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்.பி.க்கு சிபிசிஐடி அழைப்பாணை!