சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் பல்வேறு வினாக்களை முன்வைத்தார். அதில் பண வீக்கத்துக்கு ஏற்ப பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு நிர்ணயிக்கப்படும் தொகையை உயர்த்தி வழங்கும் திட்டம் உள்ளதா? மேலும் 2015-16 முதல் 2021-22 வரை இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்வியை முன் வைத்திருந்தார்.
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர், மத்திய உதவியாக இந்திய அரசு இரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இதன்படி, ISSR-இன் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம், AHP-இன் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.1.5 லட்சம், பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் மீதமுள்ள தொகை மாநில அரசுகளாலும், பயனாளிகளாலும் அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
![MP Ravikumar revealed Rs 1906 crore pending in the Prime Minister Urban Housing Project for Tamil Nadu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-12-2023/tn-che-mpravikumar-question-in-loksabha-7211920_17122023112313_1712f_1702792393_899.jpg)
மேலும், 2022ஆம் ஆண்டு வரை இருந்த இந்தத் திட்டம், இப்போது 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கான யூனிட் காஸ்ட்டை உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும், தமிழ்நாட்டுக்கு இந்தத் திட்டத்துக்கென 2015-2016 முதல் 2022 வரை மொத்தம் 8 ஆயிரத்து 516.33 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இது குறித்து எம்.பி.ரவிக்குமார் தெரிவிக்கையில், அமைச்சர் அளித்த விவரத்தில் பல ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பாதி அளவே விடுவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. 2015-2016-இல் 548.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 129.35 கோடி ரூபாய்தான் விடுவிக்கப்பட்டுள்ளது. 2016-2017இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆயிரத்து 424.58 கோடி, விடுவித்ததோ 637.75 கோடிதான். 2017-2018இல் ஒதுக்கீடு செய்யபட்டது ஆயிரத்து 723.11 கோடி, ஆனால் விடுவித்தது ஆயிரத்து 194.00 கோடி மட்டுமே.