மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தொடங்கிய 14 மாதங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் நின்று அனைவரும் பாராட்டு வகையில் பெரும் மக்கள் ஆதரவினைப் பெற்றது. இது நம் அனைவருக்கும் பெரும் உற்சாகம் அளித்தது.
அதேநேரம் தமிழ்நாடு அரசியலை மாற்றியமைக்க வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கான உண்மையான, நேர்மையான அரசு அமைத்திட நாம் இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு முழுவதும் நமது கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாக்காளரையும் நமது கட்சியின் செயல்வீரர்கள் நேரடியாக களத்தில் சந்திக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தின் காரணமாக நமது கட்சியின் மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்படுகிறார்கள்.
கட்சியின் தொண்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களோடு ஒத்துழைத்து மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்கின்ற எனது லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘ஜனநாயகத்தின் பக்கம் நீதியை நிலைநிறுத்த வேண்டும்’ - கமல்ஹாசன்