தமிழ்நாடு மக்களுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க சென்னையில் தொடங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் ஏழு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களைக் கலைத்து, பாஜக அரசு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ”பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால் இந்த பாஜக அரசுக்கு இருக்கின்ற நிறுவனங்களைக் கலைப்பதோ, தனியாருக்கு விற்பதோ மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது.
முரசொலி மாறனால் தொடங்கப்பட்டது
கலைஞரின் மனசாட்சியாக இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தீவிர முயற்சியின் விளைவாக 2003ஆம் ஆண்டில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சென்னையில் தொடங்கப்பட்டது.
இங்கு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தீர்ப்பாயம், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது. ஆனால் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் இந்தத் தீர்ப்பாயத்தைக் கலைத்துள்ளது மத்திய பாஜக அரசு. இத்தீர்ப்பாயம் மட்டுமல்ல, இன்னும் பிற ஏழு தீர்ப்பாயங்களையும் கலைத்து மூர்க்கத்தனமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி
உயர் நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்க மக்களுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பாஜக அரசு கலைத்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்தது, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.
ஒருபுறம் உரவிலையை உயர்த்தி விவசாயிகளுக்கும், இன்னொரு புறம் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்து தமிழ்நாட்டிற்கு மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை, விவசாயிகளும் தமிழ்நாட்டு மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் ட்வீட்
மேலும் இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன், ”மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் தீவிர முயற்சியால் சென்னையில் அமைக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை திடீரென கலைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த அறமற்ற செயலுக்கு எனது கடும் கண்டனங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'அரக்கோணம் ரெட்டை கொலைக்கு பாமக கண்டன அறிக்கை விடலயே' - திருமாவளவன் கேள்வி