சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 18ஆம் தேதி 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (மார்ச் 19) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் மார்ச் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 6) மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குப் பின் கேள்வி நேரத்தின் போது, சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் கொடைக்கல் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், 'சோளிங்கர் தொகுதியில் கொடைக்கல் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 500 மெட்ரிக் டன் கொள்முதல் திறனுடன், 94 லட்சம் மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன' எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 110 விதியின் கீழ் ஒப்பந்தங்கள்; அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர்