சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் காவிரி விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “காவிரி விவகாரம் குறித்து அடிப்படை புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும். இதனைக் கண்காணிக்கத்தான் காவேரி மேலாண்மைக் குழு ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதனை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா? காவிரி விவகாரத்தில் திமுக அரசு துணிச்சலாக செயல்படவில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி முதலில் தன்னுடைய துனிச்சலை சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கலாம். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்பதை சரியாக அறிந்து கொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசுக்கு முட்டுக் கொடுக்கும் நோக்கில் சட்டபேரவையில் உலரி இருக்கிறார்.
காவிரி விவகாரத்தில் மோடி அரசைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் பாஜக 'B' டீமாக அதிமுக செயல்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளார் எடப்பாடி. காவேரி விவகாரம் பற்றியும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அடிப்படை புரிதல் இல்லாமல், ஆளும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் ஒன்றிய பாஜக அரசை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஈபிஎஸ் இதை வலியுறுத்தி உள்ளார்.
கணவரிடம் விவாகரத்துப் பெற்று இருந்தாலும் மனைவியின் மனதின் ஓரத்தில் கொஞ்சம் பாசம் இருக்கத்தான் செய்யும் என்பதை போல பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருந்தாலும் வஞ்சனை செய்யும் பாஜகவை ஈபிஎஸ் பாதுகாப்பது வெளிப்படுத்தியுள்ளது அபத்தமாக உள்ளது.
காவேரி விவகாரம் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 21 நாள்கள் முடங்கியதாக கூறுவது பொய். 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற முடங்கியது உண்மை ஆனால் ரபேல் பிரச்னை மற்றும் தெலுங்கு மாநில பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் கூச்சல் ஏற்படுத்தி வந்த நேரத்தில் அதனை திசை திருப்பவே காவேரி விவாகரம் தொடர்பாக அதிமுகவினர் அப்போது போராட்டம் செய்தனர் என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக மறைக்க முடியாது.
ஈபிஎஸ் ஆட்சியில் இருந்த நேரத்தில் இஸ்லாமியர்களை வெளியே விட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இஸ்லாமியர்களை விடுவிக்க கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட நாள்களாக சிறையில் உள்ள 49 நபர்களை விடுவிக்க கோரி ஆளுநரிடம் கோப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் 28 பேர் இஸ்லாமியர்கள். ஆளுநர் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் அதனை வைத்து உச்ச நீதிமன்றம் செல்லலாம்" என்றார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்! அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு!