கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கஸ்தூரி நாயக்கன்புதூரில் இருக்கும் தனது பாட்டியை அங்கு தங்கி கவனித்துவந்தார்.
இந்நிலையில், 2019 மார்ச் 25ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, உடலை வேறு இடத்தில் வீசி சென்றுவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலர்கள், சந்தோஷ்குமாரைக் கைதுசெய்து, அவருக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டின் கீழும், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு-செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து 2019 டிசம்பர் 27இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி சந்தோஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
அதில், சிறுமியின் மரபணு சோதனையில், மேலும் ஒரு நபர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிய போதிலும், அது குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடாமல், அவசர அவசரமாக வழக்கை விசாரித்து தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் மட்டுமே, வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுப்பையா, டீக்காராமன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க துடியலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க...சும்மா பேச்சுக்கு ட்ரம்பை கலாய்த்த ஆர்ஜிவி