சென்னை: வேதாரண்யம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தொகுதி முழுவதும் ரூ.60 கோடி அளவிற்குப் பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சுமார் 7,000 பேருக்குப் பட்டா வழங்கப்படும் எனப் பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளைத் தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். எனவே, வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு தரப்பு வாதங்களும் கேட்டு அறிந்த நீதிபதி வழக்கினை தீர்ப்பிற்காகத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த வழக்கில் தேர்தல் செல்லாது அதனால் அதிமுக வேட்பாளர் ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் 2021ஆம் ஆண்டு போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பெற்ற வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, வாக்காளரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "3 வருடமாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்?" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!