சென்னை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை (ஜனவரி 26) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி ராஜபாதையில் நடக்கும் முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் விண்ணப்பித்த நிலையில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் நாளை நடக்க உள்ள அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(ஜன.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும், நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் முதலமைச்சரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தலையிட முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்